வரும் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா, மத்தியில் ஆட்சிக்கு வந்தால் பரிவர்த்தனை வரி விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என பாஜக அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேலு, தலைவர் என்.ஜெகதீசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனிநபர் வருமான வரிக்குப் பதிலாக, செலவு வரியை விதிக்க வேண்டும் என்ற கருத்தை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நிதிஅமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் முன்ஆலோசனை கோரிக்கை கடிதத்தில் இதை வலியுறுத்தியுள்ளோம். ஆனால், இதுவரை இக் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.
இந்நிலையில், மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வருமான வரி, கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்ட வரிகளை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாக வர்த்தகப் பரிவர்த்தனை வரியை விதிப்பது குறித்து பரிசீலிக்கும் என பாஜக அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது.
சரக்குகள் மற்றும் அசையும், அசையா சொத்துக்கள் வாங்குவது போன்ற பரிவர்த்தனையின்போது 1 அல்லது 1.5 சதவீத பரிவர்த்தனை வரி விதித்தால், இப்போது அமலில் உள்ள மேற்கண்ட வரிகளின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் மொத்த வருமானமான ரூ.14 லட்சம் கோடியை விட இருமடங்கில் வரிவருமானம் கிடைக்கும் என பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின்கட்கரி குறிப்பிட்டுள்ளார். இதுநடைமுறை சாத்தியமானால் வரிச் சட்டங்களில் செய்யப்படும் மிகப்பெரிய புரட்சிகரமான சீர்திருத்தமாக அமையும் எனத் தெரிவித்துள்ளனர்.