மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் இம்மாதம் 2-ம் தேதி கன்னியாகுமரி – புனலூர் பாசஞ்சர் இரயில் சேவை துவக்க விழாவில் சென்னை – கன்னியாகுமரி இடையே புல்லட் இரயில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக அறிவித்திருப்பது தென் தமிழக மக்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் செய்தியாகும்.
தென்னக இரயில்வேயில் சென்னைக்கும் – கன்னியாகுமரிக்கும் இடையே குறிப்பாக இரயில்வேக்கு மிக அதிகமான வருவாயை ஈட்டித் தரும் சென்னை – மதுரை பிரிவில் நாளுக்கு நாள் பெருகி வரும் பயணிகள் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு அப்பிரிவில் புல்லட் இரயில் இயக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கடந்த சில ஆண்டுகளாக இரயில்வே அமைச்சகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் சமீபத்திய ஜப்பான் விஜயத்தின்போது இந்தியாவில் அதிவேக புல்லட் இரயில் திட்டங்கள் உள்பட பல்வேறு கட்டமைப்பு மற்றும் இதர வளர்ச்சித் திட்டங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2.10 லட்சம் கோடி முதலீடு செய்ய ஜப்பான் அரசு உறுதியளித்திருக்கும் நிலையில் மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் இணை அமைச்சரின் இந்த அறிவிப்பு மிக அத்தியாவசியமான இந்த இரயில்வேத் திட்டம் நிறைவேற விரைவில் இரயில்வேத் துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.