மத்திய நிதி அமைச்சர் திரு அருண் ஜெட்லி சமர்ப்பித்த 2015-2016-ம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் அதி நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மதுரைக்கு அருகில் உள்ள தோப்பூர் உட்பட ஐந்து இடங்களைத் தேர்வு செய்திட மத்திய அரசிற்கு தமிழக அரசு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. கீழ்கண்ட காரணங்களை கருத்தில் கொண்டு மதுரைக்கு அருகில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமணையை அமைத்திட மத்திய அரசு முதல் முன்னுரிமை அளித்திட தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டுமென தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தமிழக முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளது.
2009-ம் ஆண்டே எய்ம்ஸ் மருத்துவமணை மதுரைக்கு அருகில் தோப்பூரில் தமிழக அரசுக்குச் சொந்தமான 385 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தமிழக அரசு சார்பில் ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமணை உட்பட நவீன மருத்துவ சிகிச்சை வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய பல்வேறு மருத்துவமனைகள் உள்ளன. இதனால் சென்னை மற்றும் இதர வட மாவட்டங்களில் உள்ள மக்கள் குறைந்த செலவில் உலத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். ஆனால் தென் மாவட்டங்களில் அத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவமனை இல்லாத காரணத்தால் தென் தமிழக மக்களுக்கும் அத்தகைய வசதி கிடைக்கப்பெற மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு தேர்வு செய்து அனுப்பியுள்ள ஐந்து இடங்களில் மதுரைக்கு அருகில் உள்ள தோப்பூருக்கு அருகாமையில் மட்டுமே சர்வதேச விமானப் போக்குவரத்து வசதியுடன் கூடிய மதுரை விமான நிலையம் உள்ளதின் காரணமாக சிகிச்சை பெற வேண்டியவர்கள் விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து செல்ல இயலும்.