இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தொழில் தொடங்க வருமாறு தமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
நமது வர்த்தக சங்கத்தின் வர்த்தகத் தூதுக் குழு, முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேலு தலைமையில் இலங்கை சென்றுள்ளது. அங்கு யாழ்ப்பாணத்தில் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் தலைவர் என்.ஜெகதீசன் தலைமையில் வெள்ளிக்கிழமை(29.01.2016) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழக தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தொழில் வர்த்தக சங்கச் செயலர் ஜே.ராஜமோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உணவு பதனிடல், ஜவுளி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த தொழில்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. எனவே தமிழகத்தில் இருந்து தொழிலதிபர்கள் வடக்கு மாகாணத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டும். அவ்வாறு வரும் தொழிலதிபர்களுக்கு அனைத்து சலுகைகளும், உதவிகளும் அளிக்கப்படும் என அவர்
உறுதி அளித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.