தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சூரிய சக்தியால் இயங்கும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 5 குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்ப் செட்டுகளை 80 சதவீத மானியத்துடன் 2000 விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
படிப்படியாக இத்திட்டம் மேலும் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
வேளாண் துறைக்கு இலவச மின்சாரம் வழங்கிவரும் நம் மாநிலம் கடுமையான மின்பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இச்சூழ்நிலையில் மரபு சார்ந்த மின்சாரத்திற்கு பதிலாக மாற்று விசைத் திறனான சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப் செட்டுகளை கணிசமான மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கும் இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது வெகுவாக பாராட்டத்தக்கது.
இதனால் வேளாண் துறைக்கு மரபு சார்ந்த மின்சாரத்தின் தேவை குறைந்து மின்பற்றாக்குறையினால் மற்ற பிரிவுகளைச் சார்ந்த மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு கணிசமாக குறைந்திட வாய்ப்பு ஏற்படும்.
விவசாயிகள் சங்கங்கள்(Farmers Clubs) மூலம் தமிழக அரசின் இந்த முற்போக்கான திட்டம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த எங்கள் சங்கம் தேவையான நடவடிக்கை எடுக்கும்.